கடந்த மாதம் முதல் வெள்ளி நிலா மாத இதழ் அனைத்து ஊர்களுக்கும் இலவசமாக அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டள்ளது கிடைக்காதவர்கள் பின்வரும் அலைப்பேசி எண்னுக்கு எஸ் எம் எஸ் மூலம் தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் வரும் மாதம் முதல் தங்களுக்கு இலவச பிரதி அனுப்பி வைக்கப்படும்....9841110188, Email: vellinila@gmail.com

08 July 2008

ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை தெரிவிக்கும் கடிதத்தை வெளியுறவுத் துறை அமைச்சரும், இடதுசாரி - ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் காரத் தெரிவித்தார்.ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.



அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரிகள் இன்று அறிவித்த நிலையில், ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அவர் தங்கியுள்ள ஓட்டலில் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இதனால் ( ஆதரவு வாபஸால் ) தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என்றும், அரசுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் பதிலளித்தார்.சர்வதேச அணுசக்தி முகமையை அரசு அணுகப்போவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விரைவிலேயே அணுகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

No comments: